அழுகிய முட்டையும்! ஆட்சியர் முடிவும்! பொறுப்பு யார்? தீர்வு என்ன?

தமிழ்நாட்டில் சமூகநலத்துறையின் கீழ் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ், 41,000 சத்துணவு மையங்கள் உள்ளன. 25 குழந்தைகளுக்கு மேலுள்ள மையங்களுக்கு 1 சமையலர் 1 உதவியாளர் & 1 மேற்பார்வையாளர் என்ற வகையில்1,27,000 பணியிடங்கள் உள்ளன. அவற்றுள் சுமார் 30,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

2020-21 நிலவரப்படி அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த சுமார் 55,00,000 மாணவர்களுக்கு சத்தான உணவுகள் சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வியாண்டில் இவ்வெண்ணிக்கை 5% வரை உயர்ந்திருக்கக் கூடும்.

தி.மு.க ஆட்சி காலத்தில் சத்துணவோடே முட்டையும் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, 2006-11 ஆட்சி காலத்தில் வாரம் 5 முட்டையாக உயர்த்தப்பட்டது. அப்பொழுது முட்டைக் கொள்முதல் மாவட்ட ஒப்பந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு கோழிப் பண்ணைகளில் இருந்து நேரடியாகப் பெறப்பட்டது.

2012-ஆம்  ஆண்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இம்முறை பெருநிறுவனங்களை மட்டும் அனுமதிக்கும் நோக்கில் திருத்தப்பட்டு 2 ஒப்பபந்ததாரர்களுக்கு மட்டுமே முட்டை விநியோகிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. இதில் 500 கோடிவரை ஊழல் நடைபெற்றதாக தேர்தல் பரப்புரையில் குற்றம் சாட்டினார் மு.க.ஸ்டாலின். மேலும், முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் மேற்படி ஊழல்குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், 1 கோடி முட்டைகள் கேரளாவுக்கும், 1.5 கோடி முட்டைகள் தமிழ்நாட்டுப் பொதுமக்கள் நுகர்விற்கும், 50 இலட்சம் முட்டைகள் சத்துணவுத் திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது.

சத்துணவுத் திட்டத்திற்கான முட்டையானது எண்ணிக்கை அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டாலும் அதன் தரத்தை அறிய எடையிட்டே கொள்முதல் செய்யப்பட வேண்டும். அரசுக் கொள்முதல் ஒப்பந்த விதிப்படி, ஒரு முட்டையின் எடை 45 - 52 கிராம் இருக்க வேண்டும். 12 முட்டைகளின் எடை 525 கிராம் இருக்க வேண்டும். அக்மார்க் தரத்தில் ஏ மீடியம் ரக முட்டையாகவும், சுத்தமாகவும், பாக்டீரியா / கிருமிகள் இல்லாமலும் இருக்க வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் மாறுபாடு கண்டறியப்பட்டால் இருமடங்கு தொகை தண்டத் தொகையாக நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும்.

ஆனால், கடந்த காலங்களில் இந்நடைமுறைகள் முறையாகப் பின்பற்றாது அளவில் குறைந்த புல்லட் ரக முட்டைகள் விநியோகிக்கப்பட்டு இதில் நடைபெற்ற ஊழல் அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை நீண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே வழக்காடு மன்றத் தலையீடுகள் எனக் கடந்து தற்போது மண்டல அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒப்பந்ததாரர் பண்ணைகளில் இருந்து பெறும் முட்டையை இருப்பு வைத்து விநியோகிப்பதால் முட்டை கெட்டுவிடக்கூடிய சூழல் உள்ளதாலும், அரசு நிர்ணயிக்கும் விலைக்கே எவ்வித இடைத்தரகர்களும் இன்றி மீண்டும் கோழிப் பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்வதால் முட்டையின் தரம் உறுதி செய்யப்படுவதோடே அரசின் செலவினங்களும் குறையும் என்பது பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை.

இதிலென்ன பெரிய ஊழல் நடந்துவிடப் போகிறது என்றால், ஒரு நாளைக்கு முட்டை ஒன்றிற்கு 1 ரூபாய் ஊழல் நடைபெற்றாலும் மாதம் சுமார் ரூ.1,10,00,000/- (1.1கோடி) அரசிற்கு இழப்பாவதோடு அப்பணம் கையூட்டாக மாநிலம் தொடங்கி வட்டாரம் வரை பல மட்டங்களில் பங்கிடப்பட வாய்ப்புள்ளதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டது.

முட்டை கொள்முதல் - விநியோகம் இவ்வாறு இருக்க இதில் சற்றும் தொடர்பற்ற அமைப்பாளர், சமையலர் & பள்ளித் தலைமையாசிரியர் ஆகிய மூவரும் அழுகிய முட்டை சத்துணவில் வழங்கப்பட்டது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் திருப்பூர், கரூர் கிருஷ்ணராயபுரத்தைத் தொடர்ந்து செய்தி ஊடகங்களில் வெளிவந்த 3-வது அழுகிய முட்டை நிகழ்வு இது. செய்திக்கு வராமலே சென்றவை எத்தனையோ!?

சரி. இதில் இம்மூவரையும் பணியிடை நீக்கம் செய்தது சரியா? என்றால் அரசு விதிமுறைகள் பயனர் முடிவுநிலையில் வரும் இம்மூவரை மட்டுமே தவறுக்குக் குற்றவாளிகளாக்கி பொறுப்பாக்கியுள்ளது. அதே நேரம் இது போன்ற தவறுகள் குழந்தைகளைப் பாதிக்காதபடி தடுக்கும் கடமையையும் இவர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆம். சத்துணவு மையத்திற்கு வரும் முட்டையை எடையிட்டுத்தான் வாங்க வேண்டும். அரசு நிர்ணயித்த எடையில் வாங்கிய முட்டையை சமைக்கும் முன் கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். முட்டை விநியோகத்தின் இறுதித் தளம் பள்ளிதான் என்பதால் இப்பொறுப்பு, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் - அமைப்பாளர் - சமையலர் ஆகியோரின் கூட்டுப் பொறுப்பாகிறது.

பீகார் & நெய்வேலியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு நடந்த துயரத்தைத் தொடர்ந்து 19.07.2013-ல் சமூகநலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையின்படி சத்துணவை மேற்படி நபர்கள் மூவரும் சுவைத்துப்பார்த்து 30 நிமிடங்கள் கழித்தே குழந்தைகளுக்குப் பரிமாற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்நடைமுறையைப் பின்பற்றியிருப்பின் முட்டை கெட்டுப் போனதை தலைமையாசிரியர் அரைமணி நேரம் முன்னரே அறிந்திருந்து இக்குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க இயலும் என்ற அடிப்படையில் தான் தலைமையாசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும்.

தற்போதைய கல்வித்துறை நடைமுறைகளின்படி பாடம் நடத்துவதைவிட அதிக Online பணிகளைத் தினந்தோறும் குறித்த நேரத்திற்குள்ளாக முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழலில் ஆசிரியரோ தலைமை ஆசிரியரோ இதில் கவனம் செலுத்தப் போதிய நேரமே இருந்திருக்காது என்பதே உண்மை என்றாலும், சத்துணவிற்கும் சேர்த்து பொறுப்பாக்கப்பட்டபின் அதற்கும் உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

சில இடங்களில் தலைமையாசிரியர் vs சமையலர் / தலைமையாசிரியர் vs அமைப்பாளர் / அமைப்பாளர் vs சமையலர் என்று பிரச்சினைகள் இருக்க, 30,000 காலிப்பணியிடங்களால் சமையலரும் அமைப்பாளரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஒருபுறம்; மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் கடந்த 5 ஆண்டுகளாகவே இல்லாததால் ஆசிரியர் பற்றாக்குறை மறுபுறம் என்று தமிழ்நாட்டின் பெரும்பான்மை சத்துணவு மையங்கள் பிரச்சினைகளோடுதான் நாள்களை நகர்த்துகின்றன.

எது எப்படியிருப்பினும் குழந்தைகளுக்கான தரமான & ஆரோக்கியமான உணவில் சமரசம் செய்து கொள்ள எந்தவொரு தலைமையாசிரியரும் விரும்புவதில்லை என்றாலும், கரூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பதட்டத்தையும், எதிர்ப்பையும், வெறுப்பையும், கொந்தளிப்பையும், விரக்தியையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது உண்மையே.

என்றாலும், நம் குழந்தைகளுக்கு நாம் தானே பொறுப்பு எனும் பொற்றோர் பார்வையோடே சிரமங்களை எதிர்கொண்டு கூடுதல் சிரத்தையோட சத்துணவு மேற்பார்வையையும் நாள்தோறும் மேற்கொள்வோம் என்ற சுயமுடிவு நம் குழந்தைகளைக் காப்பதோடே தமிழ்நாட்டின் சமூக நலத்துறை நடவடிக்கைகளையே சீர்படுத்தும்.

ஆம். இனி பள்ளிக்கு வரும் சத்துணவுப் பொருள்களைத் தலைமையாசிரியரின் நேரடிக் கண்காணிப்பில் பெற்றுக் கொள்வதை வலியுறுத்துங்கள். முட்டையை எடையிட்டுக் கொடுத்தால் மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் திருப்பி அனுப்பிவிடுங்கள். இது கோடிக்கணக்கான ரூபாய்கள் தொடர்பானது என்பதால் களத்தில் 100% எதிர்ப்புகள் வரும். அதனைச் சார்ந்த ஆசிரிய இயக்கங்களின் வழி ஒற்றுமையோடே எதிர்கொள்ளுங்கள். தனித்துச் செயல்படுவீர்களானால் உறுதியாகப் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். கவனம்.

எடையிட்டு பெற்ற முட்டைகளைச் சமைக்கும் முன்னர் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் முட்டையைப் போட்டு அதன் தரத்தைச் சோதியுங்கள். அழுகிய முட்டை மட்டுமே மிதக்கும். நல்ல முட்டை நீரில் மூழ்கி கிடைமட்டமாக பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும். 3 வாரங்கள் பழைய முட்டை எனில், மூழ்கிய நிலையில் செங்குத்தாக இருக்கும். மேலும், முட்டையை காதுக்கு அருகில் வைத்து ஆட்டிப்பார்த்தல், நல்ல முட்டையில் அதிர்வோ சத்தமோ வராது. இவற்றைத் தினந்தோறும் கண்காணியுங்கள்.

எளிதாக வாய்ப்பேயில்லைதான் என்றாலும். . . வண்டியிலிருந்து எடையிட்டு இறக்குதல், விநியோகிப்பவர் கையொப்பம், நாள்தோறும் சமைக்க எடுத்த முட்டைகள், சோதனைக்குப்பின் நல்லவையென உறுதியான முட்டைகள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய 'முட்டை கண்காணிப்புப் பதிவேட்டைப்' பராமரிப்பதே நல்லது.

இந்நடைமுறைகளை மேற்கொள்வதில் நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் & எதிர்ப்புகள் எழுந்தாலும் இதில் ஆசிரிய சமுதாயம் உறுதியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில், உறுதி தவறினால். . . பிரச்சினை என்று வந்தால் அதற்கு இரையாகப்போவது பள்ளியளவில் உள்ளோர் மட்டுமே!

No comments:

Post a Comment